24. புகழ்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: புகழ்.

231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
232. உரைப்பார் உரைப்பவை எல்லாம்
இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.
233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு
235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
236. தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
238. வசையென்ப வையத்தார்க் கெல்லாம்
இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்
239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
240. வசையொழிய வாழ்வாரே வாழ்வார்
இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.
இறுதியாக மாற்றியது: புதன், 2 பிப்ரவரி 2022, 3:14 காலை