34. நிலையாமை

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்:நிலையாமை.

331. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
332. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
333. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
334. நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
336. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
338. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
339. உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
340. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
Last modified: Wednesday, 2 February 2022, 4:49 AM